Wednesday, February 8, 2012

யாழ் முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல்

யாழ்பாடி யூஸுப்: இடம்பெயர்ந்து பல்வேறு ஊர்களிலும் நாடுகளிலும் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கான ஒன்று யாழ்ப்பாணம் சோனகரிஸ்தானில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியை சிறுசிறு தலையங்கங்கள் மூலமாக விரிவாக விளக்கலாம் என்று கருதி அவற்றை இங்கு பதிவு செய்கின்றேன்.



நிகழ்ச்சியின் நோக்கம்
இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக மீள குடியேற்றத்தை ஊக்குவித்தல் காணப்படுகிறது. மக்களை மீளவும் யாழ்ப்பாணத்தில் ஒன்று கூட்டி அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து பரஸ்பரம் யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே குடியேறியுள்ள முஸ்லிம்களுடன் தொடர்புகளை உண்டாக்கவும் இந்நிகழ்ச்சி உதவுகின்றது.


நிகழ்ச்சித் தினங்கள்
நிகழ்ச்சி இடம்பெற்ற தினங்களான பெப்ரவரி 4 தொடக்கம் ஏழு வரையான தினங்கள் இலங்கையின் விடுமுறைதினங்களாகும். 4ம் திகதி சுதந்திர தினம். ஏழாம் திகதி போயா விடுமுறை. ஒவ்வொரு வருடமும் இன்ஷா அல்லாஹ் இந்த ரபியுல் அவ்வலில் பிறை 12, 14, தினங்கள் விடுமுறையாகவே இருக்கும். இத்தினங்களுடன் சன மற்றும் ஞாயிறு விடுமுறைகளை சேர்த்தால் நான்கு நாட்கள் தொடர்ச்சியான விடுமுறைகள் வரும். இத்தினம் யாழ் முஸ்லிம்களின் ஒன்று கூடலை நடத்த சிறந்த தினங்களாகும்.


சிலர் இவ்வொன்று கூடல் நபியவர்களின் பிறந்த தினத்தை ஒட்டி நடத்தப்பட்டதாக கூறுகின்றனர். இது வரட்டுப் பிடிவாதமான கருத்தாகும். மேலும் இவ்வாறான குழுக்களால் யாழ்ப்பாணத்தில் குழப்பம் ஏற்படத்தவும் பட்டது. நிகழ்ச்சியை பித்அத் என்று கூறிக் கொண்டு மக்களுக்கிடையில் அடிபிடிகளை உருவாக்கியவர்கள் பித்அத்தில் கொடியதான கொலையை விட பாரிய குற்றங்களை இழைத்துள்ளனர். இவர்கள் தாம் தூய வடிவில் இஸ்லாத்தை அறியப் போகிறார்களாம். இஸ்லாம் நடைமுறையில் வராவிட்டால் அவர்கள் இஸ்லாத்தை எந்த வடிவில் அறிந்தும் பயனில்லை.


குர் ஆன் போட்டிகள்
அல்குர்ஆனை அழகாக ஓதுதல் மற்றும் மனனப் போட்டிகள் பார்ப்பவர்களை பாராட்ட வைத்தது. இதுவும் பித்அத் என்பதாக சிலர் அழுது மாய்ந்தனர். யாழ்ப்பாணத்தில் இவ்வளவு அழகாக ஓதக் கூடியவர்கள் உள்ளார்களா என்று கேட்பவர்கள் ஆச்சரியப்படும் விதமாக மீளக்குடியேறிய சிறுவர்கள் தமது திறமைகளை காண்பித்தனர்.


பேச்சுப் போட்டிகள்
பேச்சுப் போட்டிகள் வெகு விமர்சையாக இடம்பெற்றன. தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் மாணவர்கள் தமது திறமைகளை வெளிக் கொணர்ந்தனர்.


பொது அறிவுப் போட்டிகள்
பொது அறிவுப் போட்டிகள் சிறுவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போது இளசுகள் தங்கள் திறமைகளைக் காட்டினர். பெரியவர்களுக்குக் கூட தெரியாத சில விடைகளை சிறுவர்கள் கூறி அசத்தினர். யாழ்ப்பாணத்தில் தனி மனிதனால் கட்டப்பட்ட பள்ளிக் கூடம் மீரானியாக் கல்லூரி என்று பலருக்குத் தெரியாமல் இருந்தது. மர்ஹும் மீராப்பிள்ளை ஹாஜியாரால் அது கட்டப்பட்டு வக்பு செய்யப்பட்டிருக்கிறது.


விளையாட்டுப் போட்டிகள்
உதைப்பந்தாட்டப் போட்டிகள் புத்தளத்திலுள்ள யாழ் முஸ்லிம் அணிக்கும் யாழ்ப்பாணம் ஞான முருகள் அணிக்குமிடையில் மிக விறுவிறுப்பாக இடம்பெற்றது. ஓவர் 40 விளையாட்டும் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. மேலும் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ளோரால் நடத்தப்படும் யாழ் யுனைடட் அணியின் விளையாட்டும் சிறப்பாக அமைந்தது. இவ்விளையாட்டப் போட்டிகளை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் தமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துச் சென்றனர்.


மேலும் மரதன் ஓட்டம் கயிறிழுத்தல் போட்டி தலையனையடிப் போட்டிகளும் இடம் பெற்றன.


விருந்துபசாரம்
வீட்டுக்கு வரும் ஒருவரை வரவேற்று உபசரிப்பது அவ்வீட்டாரின் கடமையல்லவா? அதே போன்று பல மைல்களுக்கு அப்பாலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த யாழ்ப்பாண மற்றும் வெளியூர் முஸ்லிம்களுக்கு தமது செலவில் உணவளித்து அசத்தி விட்டனர் யாழ்ப்பாண வர்த்தக முஸ்லிம்கள். ஏறக்குறைய ஆறாயிரம் பேர் வரை வயிறு நிறைய சுவையான உணவை உண்டு மகிழ்ந்தனர். பெரும் கொண்ட சமையல் என்பதால் சில தாமதங்கள் ஏற்பட்ட போதும் மக்கள் அதனை பொறுமையுடன் சகத்து உணவை ஏற்றுக் கொண்டனர்.


வெளியூர் வாசிகள்
இந்நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான வெளியூர் முஸ்லிம்களும் வந்திருந்தனர். யாழ் முஸ்லிம்களின் விருந்தோம்பலால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஏற்பாடுகளையும் அழங்காரங்களையும் பார்த்து பெருமிதமடைந்தனர். இந்த அழங்காரங்களை ஆரம்பத்தில் எதிர்த்தோர் ; தாமும் அதனை ரசித்ததனை காணக்கூடியதாக இருந்தது. இருட்டிலே யாழ்ப்பாணத்தில் எதனைக் காண்பிக்க முடியும்.


வி.ஐ.பி. விருந்துபசாரம்
அரசாங்க அதிபா, உதவி அரசாங்க அதிபர், ஆளுனர் மற்றும் படை உயர் அதிகாரிகளுக்கான விருந்துபசாரம் இறுதி நாளான 7ஆம் திகதி இடம்பெற்றது.


இன்னுமொரு முறை இவ்வாறாக ஒன்று கூடும் சந்தர்ப்பம் கிடைக்காதா என்பதே மக்களின் கவலையாகும். அடுத்த வருடமும் இவ்வாறான நிகழ்ச்சிகளை நடத்துமாறு ஏற்பாட்டாளர்களை வேண்டிக் கொண்டு மக்கள் விடை பெற்றனர்.



No comments:

Post a Comment