Monday, January 2, 2012

யாழ்ப்பாண முஸ்லிம்கள் - துரத்தும் இனவாதம்

அபூ சையாப்
யாழ் மாநகர சபை. மேயர் அல்பிரட் துரையப்பாவால் இனவாதம் சுத்திகரிக்கப்பட்டு, மேயர் நாகராசாவால் அதே இனவாதம் மீண்டும் திறந்துவிடப்பட்டு, கொமிஷினர் சிவஞானத்தால் பராமரிக்கப்பட்ட சாக்கடை. இப்போது யாழ் முஸ்லிம்கள் பற்றிய சர்ச்சை. மாநகர சபை உறுப்பினர் விந்தன் கூறிய “யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் நாய்களை உள்ளே விட்டது தவறு” எனும் வார்த்தை சில வேளைகளில் சொல்லப்படாத வார்த்தைகளாக கூட இருக்கலாம். ஆனால் தமிழ் குறுந்தேசியவாதிகளின் உண்மை நிலைப்பாடு அது தான்.


மாநகர சபை என்பது பிரதேச அபிவிருத்தி சார்ந்த சமூக நலன்புரி திட்டங்களை உருவாக்கி செயற்படுத்தி பராமரிக்கும் ஒரு உள்ளூராட்சி சபை. இது அரசியல் சட்டங்களை உருவாக்கும் அல்லது நீக்கும் யாப்பு மன்றம் அல்ல.

தடுத்து வைக்கப்பட்ட தமிழ் கைதிகளை விடுவிக்கும் விவகாரமாகட்டும் அல்லது விடுதலை (?) புலிகளினால் முஸ்லிம்களிற்கு ஏற்பட்ட இழப்புகளாகட்டும் மாநகர சபையில் பேசப்படும் பேச்சுக்கள் அல்ல. இரண்டு குருடர்கள் புட்போல் விளையாடியது போல அல்லது இரண்டு வழுக்கை தலையர்கள் ஒரு சீப்பிற்கு சண்டை பிடித்தது போன்றது தான் இந்த மாநகர சபை பேச்சுக்கள்.

தோற்றுப்போன ஒரு போராட்டத்தின் எச்சங்களை பற்றி மாநகர சபையில் விந்தன் பேசியதை பற்றி நாம் இங்கு அலட்டிக்கொள்ளவில்லை. “யாழ் முஸ்லிம்கள் மீது பாசிஸ புலிகள் செய்த அநியாயத்தை” மாநகர சபையில் முழங்கும் அளவிற்கு மலினப்படுத்திய முஸ்லிம் சட்டத்தரணி பற்றியே கவலை கொள்கிறோம். (அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை)

உயர் மட்ட அரசியல்வாதிகளினதும் இனவாதிகளினதும் அடிமட்ட அரசியல் தளம் உள்ளூராட்சி சபைகளே. எதை செயற்படுத்த முன்பும் அதை நகர சபைகளில் பேச விட்டு, கசிய விட்டு பள்ஸ் பார்ப்பதன் ஊடாகவே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பர். சிறிசேன கூரே மூலம் பிரேமதாஸ செய்த அரசியலும் ஆர்.பிரேமதாஸ மூலம் ஜே.ஆர். ஜெயவர்த்தன செய்த மாநகர சபை அரசியலும் இதற்கு நல்ல உதாரணங்கள்.

யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் பற்றிய நகர்வில் உண்மையான அக்கறையும் விவேகமும் இருப்பின் இவ்வாறான பேச்சுக்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. மாநகர சபை என்பது எம் பிரதேச அபிவிருத்திக்கான பங்கிற்காக போராடும் ஒரு களம். அவ்வளவுதான்.

தமிழ் விடுதலை போராட்டம் என்ற பெயரில் புலி பாசிஸமும் அவர்களிற்கு முண்டு கொடுத்த தமிழ் குறுந்தேசியவாதிகளும், யாழ் முஸ்லிம்களிற்கு செய்த அநியாயத்தை ரவுப் ஹகீமுடன் சுண்டல் கடதாசியில் எழுதிய சமரச ஒப்பந்தத்தின் மூலம் கழுவிவிட முடியாது.

“வருந்துகிறோம் – மன்னியுங்கள்” என்ற வார்த்தைகளை வேண்டுமானால் பிரபாகரன் ஈழ விடுதலை போராட்டத்தில் அவர்களால் படுகொலை செய்யப்பட்ட போராளிகள், பொதுமக்கள் அழித்தொழிக்கப்பட்ட இயக்கங்கள் போன்றவற்றிற்கு சொல்லட்டும்.

யாழ் முஸ்லிம்கள் நாய்களா? இல்லையா என்பதை தமிழ் சமூகம் எவ்வாறாயினும் முடிவு செய்யட்டும். ஆனால் “சர்வதேச முஸ்லிம் உம்மாவின் ஒர் அங்கம் தான் யாழ் முஸ்லிம்கள்” என்பதனை மனதில் நிறுத்தி அவர்கள் அவர்கள் முடிவுகளிற்கு செல்லட்டும்.

மக்காவிலும், லண்டனிலும், ஜெரூஸலேத்திலும் கேட்கும் அதே பாங்கொலி தான் யாழ் சோனக தெருவிலும் கேட்கிறது. எப்படி தமிழர் போராட்டத்திற்கு புலம்பெயர் உறவுகள் தாக்கம் செலுத்தினார்களோ, இப்போது இன்னொரு கோணத்தில் தாக்கம் செலுத்துகிறார்களோ அதே போன்று தான் உலகலாவிய முஸ்லிம்களின் தாக்கம் யாழ் முஸ்லிம்கள் மீதும் செலுத்தும். இன்ஷாஅல்லாஹ்.

பொய்யான முகமூடிகளை அணிந்த தமிழ் அரசியல்வாதிகளினாலோ அல்லது முஸ்லிம் அரசியல்வாதிகளினாலோ எந்தவொரு தளத்திலும் தமிழ் முஸ்லிம் இன உறவை நிலை நிறுத்த முடியாது. அது நீண்டகால நிலையான ஆயுள் கொண்டதுமல்ல.

ரவுப் ஹக்கீமாகட்டும் அல்லது சட்டத்தரணி ரமீஸாகட்டும் யாழ் முஸ்லிம்களின் எதிர்கால வாழ்வியல் தொடர்பான அரசியல் திட்டம் இல்லாத வங்குரோந்து நிலையில் வில்லங்கமான விவகாரங்களை கையில் எடுப்பது யாழ் முஸ்லிம்களிற்கு செய்யும் துரோகமாகும். முஸ்லிம்களது ஊடகங்கள் விடயங்களை இதயத்திற்கு எடுக்காமல் மூளைக்கு அனுப்புவதனால் பல தளம்பல்களையும் தடம்புரல்தல்களையும் வருங்காலங்களில் தவிர்க்கலாம்.

தமிழர்களின் தார்மீக அரசியல் உரிமைகள், போராட்டங்கள் தொடர்பான அறிவு முஸ்லிம்களிடமும், இஸ்லாம் தொடர்பான, முஸ்லிம் உலகு தொடர்பான அறிவு தமிழர்களிடமும் வருவது காலத்தின் கட்டாயமாகும்.

யாழ் மற்றும் வடக்கு முஸ்லிம்களிற்கு எதிரான தப்பிதமான மாயைகள் இப்போது பல மட்டங்களிலும் பல வடிவங்களிலும் ஒரு நேர் கோட்டில் வலம் வருகின்றன. இதற்கு பின்னால் ஒரு இனவாத பின்புலம் இருக்கின்றது. எப்படி தெற்கிலங்கை முஸ்லிம்கள் மீது சிங்கள ஊடகங்கள் இல்லாத விடயங்களை கோயபல்ஸ் பாணியில் விடாமல் தொடர்ந்து சொல்வதன் ஊடாக சாதாரண பொதுமக்கள் மனதில் அது உண்மையென பதியவைக்கப்படுமோ அதே ஸ்டைலில் தமிழ் தரப்பும் இறங்கியுள்ளது.

ஒரு நாயை கல்லால் அடித்தால் அடுத்தவர்கள் எம்மை அடிக்க வருவார்கள். அதே நாயை வெறி நாய், விஷர் நாய் என தொடர்ந்தும் சில நாட்ககள் கூறிய பின் கல்லால் அடித்தால் அடுத்தவர்களும் சேர்ந்து கல்லால் அடிப்பார்கள். இதைத்தான் தமிழ் இனவாத சக்திகள் கையாள்கின்றனர்.

முஸ்லிம்கள் என்றால் கள்வர்கள், கீழ்தரமானவர்கள், வம்பர்கள், பொய்யர்கள், பேரினவாதத்தின் எடுபிடிகள், காட்டிக்கொடுப்பவர்கள், பெண் பித்தர்கள், இருப்பு பொருக்குபவர்கள், தினக் கூலிககள் போன்ற பல மாயையான கற்பிதங்கள் அப்பாவி தமிழர் உள்ளங்களில் விதைக்கப்படுகின்றன். நாளைய இதன் விளைவுகள் வெளியேற்றத்தையும் தாண்டிய ஹொல்கொஸ்டாக கூட மாறாலாம்.

நாளைய யாழ்ப்பாணத்தில் முன்மாதிரி முஸ்லிகள் உருவாதல் அவசியம். கிறிஸ்தவ, இந்து மக்களிடம் அவர்களின் பொய்யான மார்க்கத்தை புரிய வைத்து புனித இஸ்லாத்தை அவர்கள் ஏற்கும் களத்தை உருவாக்குவது நமது கடமை. எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அந்த சமூகத்திடம் இஸ்லாத்தின் உன்னதமான கருத்துக்களை எத்தி வைக்க வேண்டும்.

சாத்வீக போராட்டம் என்றால் என்ன? எதற்காக போராட வேண்டும்? போராட்ட தலைமை எவ்வாறானதாக இருக்க வேண்டும்? போராட்ட ஒழுங்கு விதிகள் எவை? போன்ற இஸ்லாத்தின் கருத்தியல்களை புரிய வைத்தாலே போதும். அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

யாழ் முஸ்லிம்களை வழி நாடாத்துவது இஸ்லாமிய தலைமையாக இருக்க வேண்டும். மதீனா யுகத்தை உருவாக்கும் கனவுகளில் அரசியல் சமூக இதர பணிகள் செயற்படுத்தப்படல் வேண்டும். இஸ்ரேலிலும் அராபியர்கள் வாழத்தான் செய்கிறார்கள். அரசியல் செய்கிறார்கள். வியாபார்ம் செய்கிறார்கள். யூதனிற்கு எதிராக வாதாடுகிறார்கள். அவர்களால் முடியுமென்றால் நம்மால் முடியாதா என்ன?

நன்றி  lankamuslim.org

No comments:

Post a Comment