Wednesday, January 4, 2012

முஸ்லிம் வர்த்தகரின் இரும்புக் கடத்தலுக்கு இராணுவம் உதவி ???

இது தொடர்பான யாழ் கள விபரங்களை ''யாழ்முஸ்லிம் -மண்'' பின்னர் வழங்கும் அதற்கு முன்னர் உதயன் பத்திரிகை ''முஸ்லிம் வர்த்தகரின் இரும்புக் கடத்தலுக்கு இராணுவம் உதவி! ''தெரிவித்துள்ள செய்தியை தருகிறோம்: காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையிலுள்ள பல லட்சம் ரூபா பெறுமதியான இரும்புகளை வெட்டி எடுத்துத் தென்னிலங்கைக்குக் கடத்த எடுத்த முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.தகவல் ஒன்றையடுத்து காங்கேசன்துறையில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இரும்பு ஏற்றப்பட்ட நிலையில் லொறி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
தென்னிலங்கைக்குக் கொண்டு செல்லத் தயார் நிலையிலிருந்த ஒரு தொகுதி இரும்பும், லொறியுடன் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.பொலிஸார் இரும்பு கடத்த முற்பட்டவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது, ஓடித் தலைமறைவாகிவிட்டனர் என்று ஒரு தகவல் தெரிவித்தது.உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள சீமெந்துத் தொழிற்சாலையின் பெரும் இயந்திரங்கள் இரும்புகளாக வெட்டப்பட்டுப் பல வருடங்களாகத் தென்னிலங்கைக்குக் கடத்தப்பட்டு வந்தது.

நீர்கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவரே தினமும் கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்ட வாகனத்தில் நேரில் சென்று இரும்புகளை தென்னிலங்கைக்கு ஏற்றுகிறார் என்று உதயனுக்கு நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

சீமெந்துத் தொழிற்சாலைப் பகுதியில் "பெக்கோ" வாகனம் பெரிய "கிறேன்" மற்றும் கனரக வாகனங்களின் உதவியுடனேயே அங்குள்ள இரும்புகள் வெட்டப்பட்டு, அப்புறப்படுத்தப் படுகின்றன. தினமும் மூன்று அல்லது நான்கு கனரக லொறிகளில் இரும்பு எடுத்துச் செல்லப்படுவது வழமை. இராணுவத்தினர் இதற்குத் தடையேதும் விதிப்பதில்லை.

நீர்கொழும்பைச் சேர்ந்த அந்த நபர் தனது வாகனத்தில் பெரியளவான சிங்கக்கொடியைத் தாங்கியவாறே சீமெந்துத் தொழிற்சாலைப் பகுதிக்கு செல்கிறார். இராணுவத்தினர் அந்த வாகனம் வருவதைக் கண்டதும் சோதனைச் சாவடியிலுள்ள தடைகளை அப்புறப்படுத்தி விடுகின்றனர் என்று நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.

தொழிற்சாலையிலுள்ள மூன்றில் ஒரு பகுதி இயந்திரங்கள் இவ்வாறு இதுவரை வெட்டப்பட்டு தெற்குக்கு ஏற்றப்பட்டு விட்டன.இங்கிருந்து ஏற்றப்படும் இரும்புகள் தென்னிலங்கைக்கு ஏ9 வீதியூடாகவே எடுத்துச் செல்லப்படுகின்றன. இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி எவரும் நுழைய முடியாது. எனினும் நீர்கொழும்பைச் சேர்ந்த நபர் எந்தத் தடையுமின்றிஇரும்புகளைக் கடத்தி வந்தார்.ஒரு சில இராணுவ உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனேயே இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்று வந்துள்ளது என நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment