Thursday, January 19, 2012

யாழ்ப்பாணம் மீலாதுன் நபி விழா - எதை நோக்கிய பயணம்?

ABU SAYYAF: 
வர்ண ஒளி வீசும் ட்யூப் லைட்கள். தந்தி போஸ்ட்களில் கட்டப்பட்ட ஈச்சை மரங்கள். சடசடத்து சலசலக்கும் பச்சை வெள்ளை முக்கோண பொலித்தீன் கொடிகள். ஒயாமல் ஒலிக்கும் ஈ.எம். ஹனிபாவின் கானா பாடல்கள். சந்திகளில் அமைக்கப்படும் பெரும் தோரண முகப்புக்கள். அதில் பற்றி பற்றி அணையும் கலர் மின்குமிழ்கள், அதற்கு மின்சாரம் பாய்ச்சும் பயங்கர என்ஜின். பலுன் வியாபாரி, நைஸ் மாமா, காத்தான்குடி துப்பு முட்டாஸ். மத்தாப்பு. சக்கரவாணம். கச்சுக்காக்காவின் கிடாயின் மொச்ச வாசம். தேங்காய் சோறு. திண்ணை குந்துகளில் ஆண்கள்.

அவர்கள் பின்னால் கதவிடுக்கில் கண்சிமிட்டும் பெண்கள். பதின்மவயதினரின் படபடப்பான காதல் சிக்னல்கள். சிறுவர் சிறுமியரின் பொய்களற்ற சிரிப்பொலிகள். கிழவர்களின் கடைவாய் சிரிப்பு. ஒவ்வொரு தெருவும் ஒவ்வொரு தெருவுடன் அலங்கார போட்டி போடும் கலகலப்பு. கிறிஸ் கம்பம். இன்னும் சொல்லக் கூடாதவை என எத்தனையோ சந்தோஷங்கள். மூன்று நாட்கள் திருவிழாவின் அணிவகுப்பு. இது நான் பார்த்த சோனகதெரு. இதை எழுதுகையில் கண்களில் கண்ணீர் வழிகிறது. இலங்கையில் எங்குமில்லா கொண்டாட்டம். அந்த சமூகத்தின் உயிர்ப்புமிக்க வாழ்க்கை.வாழ்தல். எல்லாமே ஒரு கனவு போல் இருக்கிறது இப்போது......

யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீண்டும் மீலாதுன் நபி விழாவினை கோலாகலமாக கொண்டாட சந்தோஷமாக தயாராகிவிட்டார்கள். இப்படித்தான் 2003ல் புலிகளும் அரசும் தேனிலவு கொண்டாடிய காலைகளில் ஒரு மீலாதுன் நபி விழாவை வெற்றிகரமாக நடாத்தி முடித்தார்கள். மீலாதுன் நபி விழா, நபியின் வழிமுறையா? (சுன்னாவா?) எனும் கேள்விகளிற்கு அப்பால் இங்கு சில புரிதல்கள் அவசியமாகிறது.

2003ல் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் மேடையமைத்து ஒரு மீலாதுன் நபி விழா நடாத்தப்பட்டது. ஏன் கொண்டாடப்பட்டது எனலாம். யாழ் முஸ்லிம்களை பிரதி நிதித்துவப்படுத்தும் முஸ்லிம் தலைவர்களின் கூட்டுவிழாவது. எந்த புலிப் பயங்கரவாதிகள் யாழ்ப்பாண முஸ்லிம்களை இரண்டு மணித்தியால அவகாசத்தினுள் பலவந்தமாக துப்பாக்கி முனையில் வெளியேற்றினார்களோ அதே புலிப்பயங்கரவாதிகளிற்கு மேடையில் கௌரவம் வழங்கினார்கள் இந்த யாழ்ப்பாண முஸ்லிம்களின் தலைவர்கள்.

இதில் இன்னொரு கேவலம் என்னவென்றால் யாழ்ப்பாண முஸ்லி்ம்களை வெளியேற்றிய விடுதலை புலிகள் எனும் பயங்கரவாத கும்பலின் அன்றைய யாழ்மாவட்ட அரசியல் பொருப்பாளர் ஆஞ்ஞநேயனே (இவன்தான் பின்நாட்களினல் இளம்பரிதி எனும் பெயரில் செயற்பட்டவன்) மேடையின் பிரதமஅதீதி. ஆக மொத்தத்தில் தங்களை இனசங்காரம் செய்த இனவாத கும்பலான புலிப்பாசிஸ்ட்களை மேடையில் அமர்த்தி முதல் மரியாதை செய்ததன் மூலம் தங்கள் மீது புலிப்பயங்கரவாதிகள் செய்த இனச்சுத்திகரிப்பை நியாயப்படுத்தினர் இந்த யாழ்ப்பாண முஸ்லிம் தலைவர்கள்.


இந்த தலைவர்களுடன் முரண்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்களின் மாற்று தலைமையின் அணியில் இருந்த முல்லா ஒருவர் ஒருபடி மேலே போய் கிளிநொச்சியில் மாவீரத் தின விழா மேடையில் புலிக்கொடியேற்றி தங்கள் விசுவாசத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தினார். இவரை வழிநாடாத்தியவரும் ஒரு முல்லாதான். புலிப்பயங்கரவாதத்தின் இனச்சுத்திகரிப்பை இஸ்லாமிய முலாமில் சமன் செய்த இரண்டு சம்பவங்களின் சாம்பிள்கள் இவை.

இப்போது இன்னொரு விழா. இதையெல்லாம் செய்பவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களை அடைவதையே குறியாக கொண்டிருக்கிறார்கள். சுதுமலையில் வந்திறங்கிய பிரபாகரன் ஐந்து சந்தியில் வந்திறங்கியிருந்தால் அவனையும் மேடைக்கு அழைத்திருப்பார்கள் இந்த முஸ்லிம்கள். அரசியல் சாணாக்கியம் என்ற பெயரில் சந்தர்ப்பவாத அரசியில் செய்வதும், ஹிக்மத் என்ற பெயரில் எதிரியிடம் மண்டியிடுவதும், டட்டிக்ஸ் என்ற பெயரில் சமூகத்திற்கு செய்யும் துரோகத்திற்கு சாயம் பூசுவதும் தொடரத்தான் செய்கிறது.

தமிழ் பயங்கரவாதம் இல்லாத தமிழ் தேசியத்தின் இருப்பென்பது இன்று கேள்விக்குறியே. தங்கள் கட்சியையும் இயக்கங்களையும் பாதுகாக்கவும், பராமரிக்கவும் யாழ்ப்பாணத்தில் ஒரு டென்சன் அரசியலை மையமாகக் கொண்ட சூழலை விரும்பும் சக்திகள் மத்தியில் மதிநுட்பத்துடன் செயற்படும் தன்மைகள் அற்ற விவேகமில்லா தலைமைகளை யாழ்ப்பாண முஸ்லிம்கள் கொண்டிருப்பது கவலைதரும் விடயம்.

எல்லோரையும் திருப்திபடுத்தும் அரசியல் களத்தில் இருந்து படைத்த இறைவனை மட்டும் திருப்திபடுத்தும் களத்திற்கு யாழ்ப்பாண முஸ்லிம்கள் அவசரமாக மீளல் வேண்டும். நமது சமூக பாதுகாப்பென்பது இறைவனின் கைகளிலேயே உள்ளது. மாறாக மனித மூளைகளிலிருந்தல்ல. இசங்களாலன்றி இஸ்லாத்தால் மட்டுமே நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்.

மீலாது நபி விழாவை நடாத்துவதன் ஊடாக யாழ்ப்பாண சோனகதெருவில் ஊடுருவி நிற்கும் தமிழ் குடியிருப்புக்களை பின்னகர்த்தலாம் என்றோ அல்லது அவர்களாகவே மெல்ல சென்று விடுவர் என்றோ நாம் மனப்பால் குடிப்பது தவறு. எமது கலாச்சாரங்களால் எமது சமூக பாதுகாப்பை நிறுவிவிடல் முடியாது. மாறாக இஸ்லாத்தை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் பின்பற்றுவதன் ஊடான ஒரு முன்மாதிரி சமூகமாக நாம் விளங்குவதன் ஊடாகவே நமது சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

பச்சை விளக்குகாளல் அலங்கரிபதாலோ அல்லது ஈச்சை மரத்து இன்ப சோலையில்....எனும் நாகூர் ஹனிபாவின் பாடலை ஸ்பீகர்களில் ஓயாமல் அலறவிடுவதனாலோ, ஆமிக்கும், புலிக்கும் புரியாணி பார்சல்களை கொண்டு சென்று கொடுப்பதனாலோ நாம் எதையுமே அடைய முடியாது. இவையெல்லாம் தற்காலிக வெற்றிகளாகவே அமையும்.

மீலாதுன் நபி என்ற பெயரில் நாம் ஒரு அரசியலை செய்யப்போகிறோம். ஆடல் பாடல்கள் ஊடான அரசியல். வினோத வெளிச்சங்கள் ஊடான அரசியல். கந்துரி சோற்றுடன் ஊடான அரசியல். விளையாட்டு போட்டிகளுடனான அரசியல். மொத்தத்தில் நாளைய வடக்கு மாகாண சபைக்கான அரசியலிது.

நபியை நாம் நல்லை ஆதீனத்திற்கு அறிமுகப்படுத்தவில்லை. நபியை நாம் தோமஸ் சவுந்திர நாயம் அடிகளாரிற்கும் அறிமுகப்படுத்தவில்லை. நபியை நாம் ஆரியகுள பன்சலை ஆமத்துருவிற்கும் அறிமுகப்படுத்தவில்லை. நபியை நாம் தேவானந்தா அண்ணைக்கும் அறிமுகப்படுத்தவில்லை. நபியை நாம் ஆளுநர் சந்திர சிறிக்கும் அறிமுகப்படுத்தவில்லை. யாழ்ப்பாணத்தில் நாம் யாருக்குமே அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் அதே நபியின் பெயரால் நாம் என்னெல்லாமோ செய்கிறோம்.

பணம் தண்ணீராக செலவழிக்ப்படுகிறது. முஸ்லிம் புலம்பெயர் உறவுகளும் வீடியோவிலும் ஸ்கைபிலும் பழைய சோனக தெருவை பார்க்கும் ஒரு உளவியல் உந்துதல் உணற்சியில் பணமனுப்புகிறது. புரியவில்லை. தமிழரின் புலம்பெயர் உறவுகள் ஈழக்கனவில் பணமனுப்புவது போல முஸ்லிம் புலம்பெயர் உறவுகள் சோனக தெரு கனவில் பணமனுப்புவதின் சூத்திரம் எனக்கு புரியவேயில்லை.

No comments:

Post a Comment