Monday, December 26, 2011

முஸ்லிம்களின் காணிகளை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்

பொத்துவில் கறங்கோவையிலுள்ள 502 ஏக்கர் விவசாயக் காணியில் முஸ்லிம் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு வன இலாகா மீண்டும் தடை விதித்துள்ள விடயம் காணி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ரீ. ஹஸன் அலி தனது ஆட்சேபனையை எழுத்து மூலம் அமைச்சரிடம் ஒப்படைத்து நியாயம் வேண்டியுள்ளார்.


அவர் தனது ஆட்சேபனையில் தெரிவித்துள்ளதாவது,


அண்மையில் காணி அமைச்சர் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு வருகை தந்து அங்குள்ள விவசாயிகளின் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நன்றி கூறுகின்றேன். அதேவேளையில் அங்கு கறங்கோவை விவசாயிகளுக்கு தற்போது நடந்துள்ள அநியாயத்தினை உங்களது அவசர நடவடிக்கைகளுக்காக முன்வைக்கின்றேன்.


கறங்கோவையில் 1981 முதல் சென்ற போகம்வரை தொடர்ந்து உரிமையுடன் விவசாயம் செய்து வருபவர்களுக்கு தடை விதிப்பதற்காக தற்போது புதுமையான ஒரு காரணத்தை வன இலாகவினர் முன்வைத்துள்ளதாக அறிகின்றேன்.


அண்டைய பிரதேச செயலகப்பிரிவாகிய லகுகலைப்பிரதேசத்துக்கும் கறங்கோவை விவசாயநிலம் அமைந்துள்ள பொத்துவில் பிரதேசத்துக்கும் இடையில் எல்லைப்பிரச்சினை உள்ளதாகவும் அப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரையில் கறங்கோவை விவசாயிகள் தங்களது காணிகளுக்குள் செல்லக் கூடாது என வன இலாகாவினர்; மிகவும் மோசமான முறையில் விவசாயிகளை அவதிக்குட்படுத்தப்படுவதாக முஸ்லிம் விவசாயிகள் எம்மிடம் முறையிட்டுள்ளார்கள்.


எல்லைப்பிரச்சினைக்கும் காணிகளில் பயிர் செய்வதற்கும் முடிச்சுப் போட முடியாது. முஸ்லிம் விவசாயிகள் சிங்களப் பிரதேசமாகிய லகுகலப்பிரதேசத்துக்குள் காணிகளை சொந்தமாக வைத்திருக்க முடியாது என்று சொல்வதைப் போன்ற ஒரு முறையற்ற செயலாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது நிர்வாகிகளின் பொறுப்பாகும். விவசாயிகளுக்குரிய பொறுப்பாக இதனை திரிவு படுத்தக் கூடாது.


1986ம் ஆண்டு புதிய பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டபோது எதேச்சதிகாரமாகவும் தன்னிச்சையாகவும் அப்போதிருந்த அரசு அப்பிரதேசத்தில் முறையான எல்லை நிர்ணயசபையினை அமைத்து காலாகாலமாக வாழ்ந்து வரும் தமிழ்பேசும் மக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளாமல் பாரபட்சமாக எல்லைகளை வகுத்துக் கொண்டது. இவ்வாறான ஒரு நியாயமற்ற எல்லைப்பிரச்சினைகளை மையமாக வைத்து அம்பாறை மாவட்டத்தின் எல்லைப்புரங்களிலுள்ள முஸ்லிம் விவசாயிகளின் உரிமைகளில் அடிக்கடி அரச நிர்வாகம் வௌ;வேறு வடிவத்தில் தலையிடுவதை நான் ஆட்சேபிகின்றேன்.


கறங்கோவை விவசாயிகளின் உரிமைப்பிரச்சினை ஏற்கனவே உயர் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப் பட்டதாகும்.


சமாதான உடன்படிக்கையின் பின்னர் இவ்விவசாயிகள் காணிகளை 2003ல் மீண்டும் செய்கை பண்ண முற்பட்ட வேளையில் வன இலாகாவினர் ஏற்கனவே இதுபோன்ற ஒரு தடையை விதித்த போது அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இவ்விடயம் ஆராயப்பட்டது. அதன் பின்னர் அப்போதிருந்த அமைச்சர்கள், அரசாங்க அதிபர், பொலிஸ் உயர் அதிகாரிகள், நில அளவையாளர்கள், விவசாய அலுவலர்கள், வனவிலங்கு உயர் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்போர் அவ்வப்போது கறங்கோவை காணிக்குள் சென்று பார்வையிட்டதன் பின்னர் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அரச அதிபரின் பணிப்புரைக்மைய இக்காணிகள் நில அளவை செய்யப்பட்டு 502 ஏக்கர் காணியை முஸ்லிம் விவசாயிகளுக்கு வழங்குவதென முடிவும் எடுக்கப்பட்டது.


12.12.2006ல் அம்பாறை கச்சேரியில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் காணி உத்தரவுப் பத்திரங்கள் பல்வேறு காரணங்களினால் கைவசம் இல்லாதவர்களுக்கு விசாரணை செய்து புதிதாக வழங்குவதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டது. இதற்கமைய பொத்துவில் பிரதேச செயலாளரினால் ஏற்கனவே 96 பேருக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்டும் உள்ளது.


உண்மை நிலை இவ்வாறு இருக்கையில் மீண்டும் புதிய உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்படும் போது கையொப்பம் இட வேண்டியது லகுகல பிரதேச செயலாளரா அல்லது பொத்துவில் பிரதேச செயலாளரா என்ற ஒரு புதிய பிரச்சினையை முன்வைத்து விவசாயிகள் நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள


ஏற்கனவே சுமார் 300 ஏக்கர் நிலம் உழுவப்பட்ட நிலையில் மேலும் விதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதென்பதனை திட்டமிட்ட பழிவாங்கலாகவே விவசாயிகள் கருதுகின்றனர்.


எனவே அமைச்சரவர்கள் உடனடியாகத் தலையிட்டு இப்பிரச்சினைக்கு அவசரமாக தீர்வை வழங்க வேண்டும் என்று ஹசன் அலி தனது ஆட்சேபனைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்”


இக்கடிதத்தை சென்ற 21ம் திகதி வரவு செலவுத்திட்ட விவாதத்தின் இறுதி நாளன்று அமைச்சர் ஜனக பண்டார தென்ன்கோனிடம் பாராளுமன்றத்தில் வைத்து நேரடியாக ஒப்படைத்து மேலும் பல விளக்கங்களை அளித்ததாகவும் அவர் கூறினார்


முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடயத்துக்கு உடனடித் தீர்வை வழங்க வேண்டும் என்றும் எடுத்துரைத்ததனால் அவசரகவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


அவர் மேலும் கூறியதாவது வடக்கு கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் பறிபோன காணிகளை மீட்டெடுப்பதற்கும் தற்போது பாவனையில் உள்ள காணிகளை மேலும் பறிபோகாமல் காப்பாற்றுவதற்கும் ஒரு பொதுவான செயல் திட்டத்தினை அனைத்து அரசியல் சக்திகளும் ஒருங்கிணைந்து முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.


அரசியல் தீர்வு பற்றி அக்கறை செலுத்தப்படும் இக்காலக்கட்டத்தில் நாம் காணி விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதுடன் பிரதேச சபை மட்டத்தில் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 2007ம் ஆண்டு அரசாங்கத்தை விட்டு முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியதற்கும் இந்த பொத்துவில் காணிப்பிரச்சினை ஒரு முக்கிய காரணியாக இருந்ததனை நாம் நினைவு கூர்ந்துக் கொள்ள வேண்டும்.

நன்றி லங்காமுஸ்லிம் 

No comments:

Post a Comment